வியாழன், 13 அக்டோபர், 2011

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - திருநெல்வேலி





தமிழகத்தின் முன்னணி நிறுவனங்கள் பலவும் இங்கே வந்து கால்பதிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், ரியல் எஸ்டேட் பிஸினஸ் இப்போது புதிய வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது!
மிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான நெல்லை என்றழைக்கப்படும் திருநெல்வேலி நகரம் பல வகைகளிலும் தனிச் சிறப்பான அடையாளங்களைக் கொண்டது. தமிழக கல்வி மற்றும் அரசியல் வரலாற்றில் திருநெல்வேலி பல மாற்றங் களையும் கொண்டு வந்திருக்கிறது என்கிறது வரலாறு. சுத்தமான தமிழ் பேச்சும், தாமிரபரணி தண்ணீரும் இந்த ஊர்க்காரர்களுக்கு மட்டுமே வாய்த்த தனித்த அடையாளங்கள்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருநெல்வேலியை தனியாகச் சொல்லிவிட முடியாது. பாளையங்கோட்டையும் இணைந்த இரட்டை நகரம் அது. மதுரைக்கு தெற்கே திருநெல்வேலிதான் முக்கியமான நகரம் என்பதால் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சமில்லை. பல சமூக மக்களின் வாழ்க்கை கலாசாரங்களும் கலந்திருக்கும் திருநெல்வேலியை 'மாதிரி நகரம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
''திருநெல்வேலி என்பது ஒரு நகரம் என்பதையும் தாண்டி அது எங்களின் அடையாளம். எந்த ஊரில் இருந்தாலும் இந்த ஊர்க்காரன் என்பதில் உள்ள பெருமிதம் எதிலும் வராதுல்ல!'' என்கிறார், டோனாவூர் ரூபஸ் ஜான் . ''வெளியில இருந்து பாக்குறதுக்கு வேணும்னா ஊரு பரபரப்பா இருக்குற மாதிரி இருக்கும். ஆனா, இங்க கொஞ்ச நாள் தங்குனீங்கன்னா இந்த ஊரை விட்டே போக மாட்டீங்கல்ல'' என்கிறார் இவர். பக்கத்துலயே இண்டஸ்ட்ரி ஏரியா தூத்துக்குடி இருக்குறதால வேலைதேடி வெளியூர் போகணுங்குற அவசியம் இல்லை'' என்றவர், சமீப காலங்களில் இந்த ஊரைச் சுற்றியே கங்கைகொண்டான், நாங்குநேரி போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வந்துவிட்டதால் வேலை வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். உண்மைதான் விவசாயம்தான் முக்கியமான தொழில் என்றாலும், புதிய தொழில் வாய்ப்புகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்கள் நாம் சந்தித்த பலரும்.
வளர்ச்சியைப் பொறுத்தவரை தொய்வு கிடையாதுதான். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் என சுற்று வட்டார மாவட்டங்களுக்கும் முக்கியமான வர்த்தக நகரம் நெல்லைதான் என்பதால், தமிழக அளவில் பல முன்னணி வணிக நிறுவனங்கள் யாவும் போட்டி போட்டுக்கொண்டு நெல்லையில் வந்து இறங்குகின்றன. குறிப்பாக வெளியூர்களிலிருந்து வரும் வாடிக்கையாளர்களின் போக்குவரத்து செலவுகளை இந்த நிறுவனங்களே அளித்துவிடுவதால் திருவனந்தபுரத்திலிருந்துகூட மக்கள் ஜவுளிகளையும் பொருட்களையும் வாங்கு வதற்கு நெல்லைக்குதான் வருகிறார்களாம். உள்கட்ட மைப்பு வசதிகள், போக்குவரத்து, சாலைவசதி போன்ற விஷயங்களும் நன்றாகவே இருப்பதால் புறநகர விரிவாக்கமும் சற்று வேகமா கவே இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் புறநகர வளர்ச்சி பல மாற்றங்களையும் கண்டுவருகிறதாம்.

நாகர்கோவில் வழியில் நான்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் வந்ததிலிருந்து இந்த பக்கம் வளர்ச்சியின் வேகம் அபாரமாக இருக்கிறது. சங்கரன்கோவில் பக்கம் காற்றாலை மின்சார உற்பத்தில் யூனிட்கள் தொடங்கப்பட்டுள்ளதாலும் இந்த பகுதிகள் கடுமையான விலை ஏற்றத்தில் உள்ளன.
அதேபோல வடக்கு மார்க்கத்தில் மதுரை வழியில் கங்கை கொண்டான் ஏரியாவும் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் வருவதால் இந்தப் பகுதிகளிலும் இடங்கள் மற்றும் மனைகளின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்த வழியில் எல்காட் தாண்டியும் லே-அவுட்கள் போட்டிருக் கிறார்கள். தூத்துக்குடி வழியில் வளர்ச்சியும் விலையும் ஆவரேஜ்தான் என்றாலும், வி.எம்.சத்திரம் வரை மனைகள் கிடைக்கின்றன. தென்காசி ரோடு, பாபநாசம் வழி ஏரியாக்கள் சுமார் விலை நிலவரம்தான்.
ரியல் எஸ்டேட் தொழிலைப் பொறுத்தவரை திருநெல்வேலி இப்போதுதான் 'பீக்’ கட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள். மொத்தமாக ஒரே தடவை பணத்தைக் கொடுத்து மனைகள் வாங்குவதாக இருந்தாலும், தவணைதிட்டங்கள் மூலமும் மனைகள் விற்பனை நடக்கின்றன. வேய்ந்தான்குளம், கே.டி.சி. நகர் போன்ற ஒரு சில ஏரியாக்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சமீப காலங்களாக டவுன்ஷிப் குடியிருப்புகள் முறையும் திருநெல்வேலி பக்கம் எட்டிபார்த்துக் கொண்டிருக்கிறது.
'' புதிய பொருளாதார மண்டலங்கள் இங்கு வந்ததிலிருந்து வெளியூர்களிலிருந்தும் ஆட்கள் வரத்தொடங்கியிருப்பதால், அவர்களுக்கேற்ப குடியிருப்புகள்
தேவையாயிருக்கிறது. ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ஒரே இடத்தில் வசிப்பதற்கு விரும்புவதால், நெல்லையின் ரியல் எஸ்டேட் தொழிலின் அடுத்த கட்டம் டவுன்ஷிப் மனைகள்தான் என்கிறார், டோனாவூர்  சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் s.செல்லம்...
புறநகர் பகுதிகள் முக்கியமான பிஸினஸ் ஏரியாக்களாக வளர்ந்து வருவதால் லே-அவுட் இடங்கள் குறைவாகவே பார்க்க முடிகிறது. தெற்கு மற்றும் மேற்கு பக்கங்களில் விவசாய நிலங்களாகவே இருப்பதும், வடக்கு மற்றும் கிழக்கு பக்கங்களில் வறண்ட பகுதிகளாக இருப்பதும் நெல்லையின் ரியல் எஸ்டேட் பல ஏற்ற இறக்கங்களும் கொண்டதாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் தொழில்வளர்ச்சி சார்ந்து அடுத்த கட்டத்தில் இருப்பதும் ரியல் எஸ்டேட் நிலவரத்தில் எதிரொலிக்கிறது என்றாலும், விலைகளைப் பொறுத்தவரை இப்போதைய நிலவரப்படி பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக